"என் மதம்! உன் மதம்!! நம் மதம்!!!"
உண்மையிலே கடவுள் என்பவர் இருந்தால் இந்த மனிதர்களை பார்த்து கோபப்படுவதா? இல்லை பரிதாபபடுவதா? என யோசிப்பார்...
மனிதன் அவ்வளவு மதங்களை உருவாக்கி இருக்கிறான். மதங்களை கடந்த அன்பு என்பது அரிதாகவே உள்ளது.
"மனிதர்களிடம் அன்பு செலுத்த முடியாது போனால், கண்ணால் காண முடியாத இறைவனிடம் எங்ஙனம் அன்பு செலுத்த முடியும்" என்ற அன்னை தெரசாவின் கூற்று எவ்வளவு உண்மையான கூற்று. மதங்களை கடந்த மனிதநேயத்தை யாரும் மதிப்பதில்லை...
சரி இந்த மதங்கள் எப்படி தான் உருவானது என யோசித்தால் நமக்கு ஒரு சின்ன கற்பனை கதை தேவைப்படுகிறது.
ஆதியில் மனிதன் பேசிய மொழி எங்கள் மொழி தான் என பல மொழி அறிஞர்கள் விவாதங்களும், பட்டிமன்றங்களும் வைத்து சண்டை போட்டு கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஆதியிலே மனிதன் பேசிய மொழி என்னவாக இருக்கும் என்றால் வெறும் சைகைகளும் மற்றும் சங்கேத ஒலிகள் மட்டுமே. தோலாடைகள் மற்றும் இலைகளை கோர்த்து அணிந்து கொண்டு குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். இடி, மின்னல், மழை, வெள்ளம் மற்றும் பூமி அதிர்ச்சி வரும் காலங்களில் வேறுவேறு இடங்களுக்கு சென்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தான். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்தனர். அந்த காலங்களில் அவன் பயந்தது இயற்கைக்கு மட்டுமே.
ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள்.
வயதான பெண் ஒருத்தி ஒருநாள் இந்த கூட்டத்தை விட்டு பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்க துவங்கினாள். இனம் புரியாத எண்ணங்கள் அவளுடைய மனதில் தோன்றின. அவள் மனதில் எழுந்த நிறைய கேள்விகளுக்கு பதில் அங்கு கிடைத்தது. புதுப்புது சிந்தனைகளால் வானின் நட்சத்திரங்களை கணக்கெடுத்தாள். பூமியின் சுயற்சியை கண்டுகொண்டாள். செடி, கோடி வளர்ப்பதை தெரிந்து கொண்டாள்.
தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்க பழகினாள். கோள்களின் பாதையை புரிந்து கொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும், உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கை பற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.
தொலைந்து போனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதை போலொரு பிரம்மை மேற்கொண்டது.
மக்களை பார்த்ததும் கை, கால்களை அசைத்து ஒருவகை நாட்டியம் ஆடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.
அந்த நாட்டியத்திற்கு அர்த்தம் புரியவில்லை என சைகை செய்தனர்.
"உண்மைகளை அறிந்து கொண்டேன்" என்றாள்.
"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.
"செல்லொண்ணா பேரின்பம்" என்றாள்.
"பைத்தியக்காரி" என்றனர்.
"ஆமாம் அசாதாரண சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள் தான்" என்றாள்.
"அவளை விடுங்கள்" பெரியவர் ஒருவர் முன்வந்தார். "உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது சொல் அதை எங்களுக்கும்" என்றார்.
"இயற்கை" என்றாள்.
"விளக்கு" என்றார்.
அவளுக்கு புரிந்ததை சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.
"புரியச்செய்" என்றனர்.
கதைகளாய் சொன்னாள் அவள் கண்டவைகளை.
"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.
"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்" என்றாள்.
கேலி செய்தனர் அவளை. கல்லால் எரிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்க சொன்னார் பெரியவர்.
"அந்த சூரிய கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது"
"நன்றி :- தமிழ் சங்கம்"
(தொடரும் ...)