Thursday, November 28, 2013

ஆதி மனிதனும் ஆதி ஸ்திரீயும்...

கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சகங்கள் அவனுக்கு தேவையான கனிவர்கங்களை  உணவாக அளித்தன. காட்டுமிருகங்கள் அவனை கண்டு நடுநடுங்கின. வானத்து பறவைகள் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான்.

ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, இனந்தெரியாத ஒருவகை தாபம், இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்தசக்தி அவனை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு அரிய பொருளை இதுவரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப்பற்றி கற்பனை செய்தான்; இரவில் அதைப்பற்றி கனவு கண்டான். "எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புத பொருளை - கர்பகக் கனியை - என்னை கவர்ந்திழுக்கும் காந்தத்தை எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?" என்று அவன் இதயம் ஏங்கி தவித்துக் கொண்டிருந்தது.

ஆதி மனிதனை படைத்த அதே சமயத்தில் இறைவன் அந்த ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்து சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்கு சுனை நீரும், தங்கி இருக்க மலைக் குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாக பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜூவாலை விட்டு அவளை எரித்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது. எந்த திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.

ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் தடுத்து கொண்டிருந்தது.

வெயில் காலத்தில் ஒரு நாள் இயற்கை நியதி காரணமாக காட்டில் தீ மூண்டு நாளாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாக பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டு தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி, தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களை கவர்ந்திழுத்த சக்தி இது தான் என்பதனையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பி பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனி பிரிக்கக்கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.

இந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கிவிட்டது என்பதை அறிந்து பரிபூரண திருப்தி அடைந்தார்.


குறிப்பு: அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தில் குந்தவையும், வல்லவரையன் வந்தியதேவனும் சந்தித்து கொள்ளும் போது.... 

Monday, October 28, 2013

மனிதனின் அடிப்படை பிரச்சனைகளும் போராட்டங்களும்-2


இரு வித தேடுதல்கள்...


மனிதன் எதையாவது நாடும்போது உண்மையில் அவன் நாடுவது அந்த பொருளை அல்ல. அந்த பொருளை அடைவதன் மூலம் தான் வேறுபடுவோம், மாறுபடுவோம் என்று நினைக்கின்றான். நாம் எப்படி இருக்கிறோமோ அது நமக்கு பிடித்தமாக இல்லை, நமக்கு பிடிக்கவில்லை. ஆதலால் எதையாவது செய்வதன் மூலம் இந்த நிலையை சரி செய்து விடலாம் என்று எண்ணுகிறோம். காலணியில் சிறு கல் மாட்டிக்கொண்டால், அதை எடுக்கும் வரை நமக்கு சங்கடமாக இருக்கிறது. அது போன்று நம் மனத்திலும் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருக்கிறது. அது போனாலன்றி அந்த உறுத்தல் போகாது. இந்த உறுத்தல் போவதற்காக, பிறர் என்னென்ன செய்கிறார்களோ அதை எல்லாம் நாம் சிறு மாறுதல்களுடன் செய்து பார்க்கிறோம். நமக்கு பிடித்தமான பொருட்களை சேகரிக்கிறோம். நமக்கு விருப்பம் இல்லாதவற்றை நீக்க முயல்கிறோம். இம்மாதிரி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாம் எல்லா தேடுதல்களையும்(pursuit-களையும்) ஆராய்ந்து பார்த்தால் அவையனைத்துமே இந்த இரு பிரிவுகளில் அடங்கிவிடும் என்பதை காணலாம். ஒன்று நாம் சேகரிக்க முயல்பவை. மற்றொன்று நாம் விலக்க அல்லது ஒதுக்க முயல்பவை. இவற்றை சமஸ்கிருதத்தில் பிரவ்ருத்தி என்றும், நிவ்ருத்தி என்றும் கூறுவார்கள். உதாரணமாக போரில் சேனை முன்னேறினால் பிரவ்ருத்தி எனலாம். திட்டமிட்டு பின் வாங்கினால் அது நிவ்ருத்தி ஆகும். இரண்டு வித தேடுதல்களும் நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கே ஆகும்.

மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக என்ன செய்கிறோம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம். ஒருவன் தன் மகிழ்ச்சிக்காக ஒன்றை வாங்க விரும்புகிறான். மற்றவன் அதையே தன் மகிழ்ச்சிக்காக விற்க முயல்கிறான். மனிதன் எதை தன்னிடமிருந்து சேர்க்க முயல்கிறான் அல்லது தன்னிடமிருந்து தவிர்க்க முயல்கிறான் என்பது அவனுடைய மதிப்பீடுகளை பொருத்தது. ஆனால், சிலவற்றை சேர்க்க முயல்வதும், சிலவற்றை விலக்க முயல்வதும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும். மேலும், மனிதனுடைய ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நேற்று விருப்பமாக இருந்தது இன்று விருப்பமாக இருப்பதில்லை.  இன்று விருப்பமாக இருப்பது இருப்பது, நாளைக்கு விருப்பமாக இருக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் இவற்றின் பின் உள்ள ஆதார சுருதியான 'நான் நிறைவு பெற வேண்டும்' என்பது மாறுவதில்லை.

எதை மாற்றினாலும் ஆதார சுருதி மாறுவதில்லை...

ஒரு ஞானி வானையே கூரையாகவும், மரத்தடியே சிம்மாசனமாகவும், காய்ந்த இலைகளையே இரத்தின கம்பளமாகவும் கொண்டு வாழலாம். அவருக்கு ஆசைகள் ஏதுமில்லை. அவருடைய அடிப்படை தேவைகளும் மிகக்குறைந்தவையே.  பிச்சையெடுத்து பெற்ற சிறிது உணவையும் பக்கத்தில் இருக்கும் நாய்க்கு அவர் அளித்து விடலாம். ஆனாலும் அவர் மிகவும் மகிழ்ச்சி உள்ளவராக காணப்படுகிறார்.

ஒருவர் அவரை பார்த்து "நானும் எல்லாவற்றையும் துறந்து விடுகிறேன். பிறகு நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று நினைக்கிறார். அவர் உடனே தன் எண்ணத்தையும் செயல்படுத்துகிறார்; தன் மனைவி, மக்கள், வீடு, வேலை அனைத்தையும் துறந்து விடுகிறார். ஆயினும், அவர் அதனால் மகிழ்ச்சியுள்ளவராக மாறவில்லை. முன்பு மனதளவில் பிச்சைக்காரராக இருந்த அவர் இப்பொழுது உடலளவிலும் பிச்சைக்காரராகிவிடுகிறார். முன்பைவிட இன்னும் அதிக துக்கமுடையவராக ஆகிவிடுகிறார் அவ்வளவு தான்.

மற்றொருவர் சொல்கிறார் "நான் அதிகமாக சேகரித்தால், அதிக மகிழ்ச்சியுடன் இருப்பேன்" என்று. அதிகம் என்பது ஒரு ஒப்பீட்டுச்  சொல். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். உதாரணத்திற்கு, பிளாட்பாரத்தில் வாழ்பவன் 'ஒரு குடிசை வீடு இருந்தால் நன்றாக இருக்கும்' என்று நினைக்கிறான். குடிசை இருப்பவன் 'ஒவ்வொரு நாளும் இரண்டு வேலை போதுமான சாப்பாடு கிடைத்தால் போதும்' என்று நினைக்கிறான். மற்றொருவன் "வெறும் சாப்பாடு மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா? ஒரு பெட்ரூம், பிளாட், ஒரு மொபைட் இவையாவது வேண்டாமா?' என்று நினைக்கிறான். பிறகு அது இரண்டு பெட்ரூம், பிளாட், ஸ்கூட்டர், கார் இப்படியாக கூடிக்கொண்டே போகிறது. சரி இவையெல்லாம் கிடைத்தாயிற்று. பிறகு என்ன? ஆதார சுருதி மாறவில்லையே!

வெவ்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்கிறான். எந்த இடத்திற்கு சென்றாலும், அதே மரங்கள், செடி கொடிகள், மலைகள், நதிகள், மக்கள், தெருக்கள், வாகனங்கள், கட்டிடங்கள் இடத்திற்கு இடம் வேறுமாதிரி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறன. அவ்வளவு தான்! ஆதலால் "எல்லாம் நான் பார்த்ததே தான்"  என்ற சலிப்பு வந்து விடுகிறது . இன்னும் வேறு எதாவது உள்ளதா என்று தேடச் சொல்கிறது. ஆதலால், பிரவ்ருத்திக்கு முடிவே இல்லை. ஆனால், 'நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதியோ மாறுவதில்லை.

இது தான் மனிதனின் அடிப்படை பிரச்சனை! மனிதன் தன்னிலே அமைதியுற்று, தன்னுடனே திருப்தியாக வாழ நினைக்கிறான். ஆனால், மனிதன் தன்னை குறைபாடுகள் உள்ளவனாக கருதும் போது அவன் திருப்தி அடைவது எப்படி? அமைதியுறுவது எப்படி? இந்த பிரச்னையை தீர்க்கும் வழி அறியாது மனிதன் பிரச்சனையிலிருந்து ஓடிவிட பார்க்கிறான். பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, சுற்றுலா போவது இவற்றின் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பி விடப்பார்க்கிறான். ஆனால், பிரச்சனையிலிருந்து தப்பி ஓடுவதால் பிரச்சனை தீர்வதில்லையே!!! ஆதலால், இந்த நிறைவின்மை என்ற பிரச்சனை பிரவ்ருத்தி, நிவ்ருத்தி இவற்றின் மூலம் தீர்வதில்லை.

வாழ்வின் குறிக்கோள்...

இப்படி நிறைவின்மை, குறைபாடுகள் இவற்றுடன் நாம் மன இறுக்கங்கள் கூடிய வாழ்வை வாழ்கிறோம். வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் எண்ணலாம். காரணம், நம் மனதில் வசதிகளுக்கு மதிப்பு இருப்பது தான். உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உண்மையில் பெரிய வேறுபாடு இல்லை. உள்ளவர்கள் வசதியாக துயரப்படுகிறார்கள். இல்லாதவர்கள் வசதி இல்லாமல் துயரப்படுகிறார்கள். அவ்வளவு தான்! ஆயினும், அனைவரும் தான் இருப்பதிலிருந்து வேறுபட வேண்டும், மாறுபட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது தான் எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை.

இந்த பிரச்னையை தீர்ப்பதே வாழ்வின் குறிக்கோளாகும். இதை நாம் எளிதில் ஒதுக்கி விட நாம் முடியாது. உதாசீனப்படுத்த முடியாது. உண்மையில் நாம் வேண்டுவது இவற்றில் எதுவுமல்ல. 'என்னிடமே நான் திருப்தியுற விரும்புகிறேன்' - இதுதான் நாம் விரும்புவது. நாம் பெற்றுள்ள அநுபவங்கள் இதை தான் நமக்கு காட்ட வேண்டும். இதுதான் பிரச்சனை என்பதை அறிந்து கொண்டால், உண்மையில் நாம் வாழ்க்கையில் எதை தேடவேண்டும் என்பது தெரியும். வாழ்க்கையில் அடைய வேண்டியது என்ன என்று தெரிந்தால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அது நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகிறது.

கீதை இந்த அடிப்படை பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது...


கீதையை படித்தறிவதால் வாழ்வில் நமக்கு என்ன லாபம் என்று கேட்கப்படுகிறது. கீதை நமக்கு உணவு, உடை கொடுப்பதில்லை. அது மக்கள் தொகை பெருக்கத்தை எப்படி நிறுத்துவது, சுற்றுபுரம் மாசுபடுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஏனெனில் இவை தற்காலிக பிரச்சனைகள் - Topical Problems. கீதை மனிதனின் தற்காலிகப் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில்லை. ஆனால் அது மனிதனின் அடிப்படை பிரச்சனையான நிறைவின்மை என்பதற்கு விடையளிக்கிறது. ஆனால், ஒன்று! அடிப்படை பிரச்சனை தீர்க்க உதவுவதன் மூலம் அது நம் அன்றாட பிரச்னையை சமாளிக்க நமக்கு உதவுகிறது.

அன்றாட பிரச்சனைகள் வரும், போகும். காலையில் ஒன்று வரும், மாலையில் ஒன்று வரும். கிருஷ்ணர், வியாசர் உள்பட எவருமே தற்காலிக பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததில்லை. இம்மாதிரி பிரச்சனை இல்லாமல் இருந்தால் சவால்கள் இல்லாமல் வாழ்க்கை சலித்துவிடும்.

அவர் கிராமத்திலேயே பெரிய மனிதர். அந்த கிராமத்து இளைஞர்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். அதற்காக ஒரு கால்பந்து மைதானத்தையும், அந்த விளையாட்டுக்கு வேண்டிய உபகரணங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து ஒரு நல்ல நாளில் கிராமத்து இளைஞர்களிடையே கால்பந்து ஆட்டத்தை துவக்கி வைத்தார்.

அந்த ஆட்டத்தை காண வந்திருந்த அவருடைய வயதான தந்தை "இவ்வளவு பணம் செலவழித்து இந்த மைதானத்தை எல்லாம் சீரமைத்த நீ, பந்து விசயத்தில் இப்படி கருமித்தனம் பண்ணி இருக்க கூடாது. இருபத்திரண்டு பேர்கள் ஒரே பந்துக்கு போட்டப்போட்டி இடும்படி செய்துவிட்டாயே! ஆளுக்கு ஒரு பந்து கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவாய்? பணம் பற்றவில்லை என்றால் என்னிடம் கேட்கக்கூடாதா?" என்றாராம்.

பந்து ஒன்று தான் இருக்க வேண்டும். அதை இருபத்திரண்டு பேர்கள் துரத்தி ஓட வேண்டும் அப்பொழுது தான் அது விளையாட்டு! சவால்! அப்பொழுது தான் அது விருவிருப்பாகவும் இருக்கும். அம்மாதிரி தான் வாழ்க்கை என்னும் விளையாட்டும்! அவ்வப்போது பிரச்சனைகள் இருக்க வேண்டும். அவை நமக்கு சவாலாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு தேசத்திற்கும் சில நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனைகள் நேரிடலாம். ஆனால், மனம் இருந்தால், அனுபவங்களிலிருந்து கற்கக்கூடிய புத்தி இருந்தால், பிரச்சனைகளை தைர்யமாக எதிர் கொள்ளலாம்.

நம் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டால், எல்லா தற்காலிக பிரச்சனைகளையும் எதிர்கொள்வது எளிதாகிறது. இல்லாவிடில் அன்றாட பிரச்சனைகள் நாம் எதிர்கொள்ளும் முறையால் புதிய புதிய பிரச்சனைகள் உருவாக்கி விடுவோம். "நானே குறைகள் உள்ளவன்" என்று நினைக்கும் ஒருவரால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்? தன்னிறைவு உள்ள ஒருவரால் தான் மற்றவர்களுக்கு உதவ முடியும், சேவை செய்ய முடியும்.

இந்த நிறைவின்மை என்ற அடிப்படை பிரச்சனை மனித இனம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது. கீதையில் இது தான் அர்ஜுனனின் பிரச்சனை. அவன் மிகுந்த மனக்கட்டுப்பாடு உள்ளவனும், பல சவால்களை அனாயாசமாக சமாளித்து வீர, தீர செயல்களை புரிந்தவனும் ஆவான். ஆனால், திடீரென தன் அடிப்படை பிரச்சனை பூதகரமாக வளர்ந்து தன்னை விழுங்கி விடுவது போல் ஓர் இயலாமையை உணர்ந்தான். பகவான் கிருஸ்ணர் அவனுக்கு பூரணமான ஆத்மாவின் தத்துவத்தை உரைத்தார். அதை அறிந்த அவன், தான் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டதை உணர்ந்தான். இது தான் கீதை நமக்கு காட்டும் வழி.

பகவத்கீதை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கோ, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கோ மட்டும் உரியதல்ல. யார் யாருக்கு வாழ்க்கையில் போராட்டங்கள் சமாளிக்க வேண்டி இருக்கிறதோ, அவற்றை சமாளிக்கும் போது எப்பொழுதும் ஒரு அடிப்படை நிறைவின்மையை உணர்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் கீதை உரியது. யார் யார் இந்த அடிப்படை நிறைவின்மை உணர்வு தமக்கு உள்ளது என்று அறிந்து அதிலிருந்து விடுபட விரும்புகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் கீதை உரியது. வரப்போகும் பதிவுகளில் கீதை எப்படி இந்த அடிப்படை பிரச்னைக்கு தீர்வை கூறுகிறது என்பதை காணலாம். இதன் முடிவில் நீங்களும் அர்ஜுனன் போன்று "என் மோஹம் போயிற்று" என்று கூறுவீர்கள். இது தான் கீதை அளிக்கும் வாக்குறுதி.
தொடரும்...

குறிப்பு:ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி எழுதிய பகவத்கீதையின் ஸராம்சம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

மனிதனின் அடிப்படை பிரச்சனைகளும் போராட்டங்களும்-1

மனிதனின் பிரச்சனைகள்...

மனிதனின் மனம் எப்பொழுதும் குழப்பங்களையும், போராட்டங்களையும் உடைய ஒரு போர்க்களமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ள இடத்தில் தான் குழப்பமும், போராட்டமும் தோன்ற முடியும். மிருகங்களின் மனதில் குழப்பமோ, போராட்டமோ தோன்றுவதில்லை. அவை சைவ உணவை சாப்பிடலாமா இல்லை அசைவ உணவை சாப்பிடலாமா என்று தம்மை குழப்பி கொள்வதில்லை. இயற்கையில் அந்த இனம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ எப்படி Program செய்யப்பட்டிருக்கிறதோ அப்படியே அவை செயல்படுகின்றன. அவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லை. மனிதனுக்கு மட்டுமே இந்த அறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் போது தான் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பங்கள் ஏற்படும். இந்தப் பள்ளியில் சேர்க்கலாமா? வேறு பள்ளியில் சேர்க்கலாமா? இந்த பாடத்தை எடுத்துக் கொள்ளலாமா, வேறு பாடத்தை எடுத்துக்கொள்ளலாமா? மேலே படிக்கலாமா? வேண்டாமா? இந்த வேலையை செய்யலாமா அல்லது வேறு வேலையை தேடலாமா? திருமணம் செய்துக்கொள்வதா, வேண்டாமா? சிறிது தள்ளி போடலாமா? ஸ்கூட்டர் வாங்கலாமா? சைக்கிள் வாங்கலாமா? அதிலும் 'யுனிகான்' வாங்கலாமா, 'பல்சர்' வாங்கலாமா? இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் திரும்பத் திரும்ப சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு பெரிய தொழிலதிபர் புதிய தொழிலை தொடங்கலாமா, இருப்பதையே இன்னும் விஸ்தரிக்கலாமா? என்று குழம்பலாம். வீட்டிலுள்ள பெண்மணிகள் "இன்று வெண்டைக்காய் சமைப்பதா? கத்திரிக்காய் சமைப்பதா?" என்று குழம்பலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் இவ்வித குழப்பங்களும் போராட்டங்களும் தினந்தோறும் உள்ளன. ஒவ்வொரு மனமும் ஒரு யுத்த களமாக இருக்கிறது.

அடிப்படை பிரச்சனை...

பகுத்தறியும் சக்தியும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிக அரிய வரப்பிரசாதமாகும். ஆனால் இந்த வரமே சாபமும் ஆகும். காரணம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் குழப்பத்தையும், போராட்டத்தையும் தவிர்க்க முடியாது. போராட்டங்களும், குழப்பங்களும் வரும் போது மனிதன் கடவுளிடம் உதவிக்கு செல்கிறான். எருமைமாடு கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ சென்று கடவுளை வழிபடுவதை நாம் காண்பதில்லை. தனக்கு கிடைத்தவற்றுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. ஆனால் மனிதனோ இவற்றையெல்லாம் செய்கிறான் என்? தனக்கு இவற்றின் மூலம் மனோதிடமும், அமைதியும் கிடைக்கும் என்று தான். ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளும், அவற்றுக்கான தீர்வை தேடும் அவசியமும் அவனுக்கு இருப்பதால்தான்.

வழியில் ஒருவரை சந்திக்கிறோம். மரியாதைக்காக அவரை "எப்படி இருக்கிறீர்கள்" என்று கேட்கிறோம். அவர் இப்படி யாராவது நம்மை கேட்க வேண்டும் என்று காத்திருந்தது போன்று, தன் வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். இவருக்கு மட்டும் தான் பிரச்சனைகள் இருக்கின்றனவா என்றால், இல்லை. மற்றவர்களுக்கும் உண்டு தான். ஆனால் அவர்களுக்கு தெரியும் இந்த கேள்வி ஓர் உபசாரத்திற்காக மட்டுமே கேட்கப்படுகிறது என்று. ஆதலால் அவர்கள் சௌக்கியம், நலம், நன்று என்று இப்படி எதாவது ஒன்றை சொல்லிவிட்டு தன் வழியே நடந்து விடுகிறார்கள். எல்லோர் மனமும் ஒரு போர்க்களம்; எல்லோருக்கும் பிரச்சனைகள் உண்டு என்பது தான்.

மிருகத்தின் கவனமானது தன் உணவு, இனப்பெருக்கம் இவற்றில் மட்டுமே உள்ளது. இவற்றுக்காக அது தன் இயல்பின்படி செயல்படுகின்றன. மனிதனுக்கும் இவை உண்டு என்றாலும், இவற்றுடன் வேறொன்றும் அவனுக்கு உண்டு. அதாவது எந்த நேரத்தில் எப்படி செயல்படும் என்று அறிய முடியாத மனம் தான் அது. காலையில் எழுந்திருக்கும் போது உலகத்தின் சிகரத்தில் இருப்பதாக உணரும் ஒருவன், மாலை நேரத்திற்குள் அதல பாதாளத்தில் விழுந்த மாதிரி உணர்கிறான். ஒருநாள் மிகவும் நட்புடன் இருப்பவன், மறுநாள் எப்படி பேசினாலும் சண்டைக்கு வருகிறான். அப்பொழுது அக்கறையுடன் கூறப்படும் ஒரு சிறிய விமர்சனம் கூட அவனுக்கு குற்றச்சாட்டாகப் படுகிறது. மற்றவர்களுடன் அவனால் ஒரே சீரான விதத்தில் உறவுகொள்ள முடிவதில்லை காரணம், அவன் மனதின் மாற்றங்கள் தான். ஏன், இன்னும் சொல்லுவதென்றால், அவனுக்கு தன்னுடனேயே எப்படி உறவு கொள்ளுவதென்று, தெரிவதில்லை. இப்படி மாறிக்கொண்டே இருக்கும், போராடிக்கொண்டே இருக்கும் மனம் இந்த காலத்தின் கோளாறு என்பதில்லை அது எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது. அது தொன்மையான பிரச்சனை! மனிதனின் அடிப்படையான பிரச்சனை!

நம் எல்லா தேவைகளையும், ஆசைகளையும் நிறைவேற்றி விட்டால், இந்த பிரச்சனை தீராதா? ஊஹும், எல்லா தேவைகளையும் ஆசைகளையும் நிறவேற்றி விட்டாலும் அடுத்தது என்ன செய்வது என்ற பிரச்சனை முளைத்து விடும். தினந்தோறும் தூங்கும்போது தற்காலிகமாக இந்த போராட்டத்திற்கு ஆரம்பித்து விடுகிறது. ஆதலால் மனம் உள்ளவரை - அது விழிப்பானாலும் சரி, கனவானாலும் சரி - இந்த போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்துடன் நம்மால் வாழ முடிவதில்லை சரி, போதை மருந்துகள், தூக்க மாத்திரை போன்றவற்றால் மனதை மரத்து போக செய்துவிடலாமே என்றால், அவற்றின் வேலை முடிந்தவுடன் மனம் விழித்தெழுகிறது. அத்துடன் போராட்டங்களும் எழுகின்றன. மனதை வேலை செய்ய விடாமல் மரத்து போக செய்து, அதனால் போராட்டங்கள் ஓய்ந்து விட்டன என்று நாம் நினைக்கும் கற்பனை உலகில் வாழ வேண்டுமா? அல்லது, இந்த போராட்டங்களை எதிர்த்து ஒரு தீர்வு காண வேண்டுமா? எது நமக்கு வேண்டும்? நம் மனம் நமக்கு வேண்டும் என்றால், இதில் உண்மையில் தேர்ந்தெடுப்பதற்கு ஏதும் இல்லை. ஆதலால் இந்த மனம் பற்றிய பிரச்னைக்கு ஓர் அடிப்படை தீர்வு காண வேண்டும்.

மாற வேண்டும் என்ற ஆசை...

மனம் மிக அரிய சக்திகள் படைத்தது. அதனால் தன்னை வருத்திக்கொள்ளும் சக்தியும் கொண்டது. இப்படி மனப்போராட்டங்கள் வருந்தும் மனிதன், நடுத்தெருவில் உட்கார்ந்து காதை பிய்க்குமாறு ஒலிக்கும் ஹாரன் சப்தத்தை சட்டை செய்யாமல், தன் உணவை அசைபோடும் எருமை மாட்டை பார்க்கிறான். அப்பொழுது "இந்த மாடு எவ்வளவு கொடுத்து வைத்தது?" என்று அவன் பொறாமைபடுவதில் ஆச்சர்யம் என்ன? எருமை மாட்டுக்கு தன்னை பற்றிய - நான் மகிழ்ச்சியாய் இல்லை என்ற இம்மாதிரியான - சுய உருவங்கள் self image இல்லை. ஆதலால், அது ஆனந்தமாக இருக்கிறது. எவ்வித மனப்போராட்டமும் இன்றி தன் இயல்பின்படி அது செயல்படுகிறது. நான் இப்படி இருக்கிறேன் இது சரியல்ல. நான் மாற வேண்டும் என்ற உணர்வெல்லாம் அதற்கு இல்லை. 'நான் இருக்கும் விதத்தில் நான் சந்தோஷமாக இல்லை' என்னும் 'காம்ப்ளெக்ஸ்' அதற்கு இல்லை.

மாற வேண்டும் என்ற ஆசை மனித இனத்திற்கே உரியது. புத்தி என்ற வலிமையினால் மனிதன் இந்த உலகத்தை பற்றி மட்டும் உணர்வு பெறுவதில்லை. தன்னை பற்றியும் உணர்வு பெறுகிறான். இந்த தன்னுணர்வு தான், self-consciousness தான் மிருகங்களிடம் இருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. தன்னை பற்றிய உணர்வு இருக்கிறது என்பது மனிதனின் சிறப்பை காட்டுகிறது. ஆனால், 'நான்', 'நான்' என்று மனிதன் உணர்கிற அந்த 'நான்' என்பதை பற்றி இவன் கொண்டுள்ள உணர்வு 'நான்' பலவித குறைபாடுகள் உள்ளவன், நிறைவற்றவன் என்பது தான். இப்படி குறைபாடுகளுடன் உள்ளதாக எண்ணப்படும் 'நான்' என்பது சங்கீதத்தில் உள்ள சுருதி போன்றது. பாடகர் பாடும்போது ராகங்கள் மாறலாம், ஸ்வரங்கள் மாறலாம். ஆனால், சுருதி மாறுவதில்லை அவர் பின்னே உள்ள தம்பூராவின் ஒலி 'ஸ...ப...ஸ...' என்று விடாமல் ஒலிக்கிறது. அம்மாதிரியே மனிதன் எதை செய்தாலும், எதை நாடினாலும் அவன் மனதில் 'நான் நிறைவு பெற வேண்டும், நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதி மாறாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எப்படி இந்த 'ஸ...ப...ஸ...' மற்ற ஸ்வரங்களுடன் கூடி வெவ்வேறு ராகங்களாக வடிவெடுக்கிறனவோ, அது மாதிரியே எது குறைகிறது என்ற ராகங்கள் மாறலாம். ஆனாலும், 'நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதியுடன் சேர்ந்தே இவை ஒலிக்கின்றன.

இது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். 'நான் நிறைவடைய வேண்டும்' என்ற இந்த வேட்கையே மனிதனின் பல்வேறு சிந்தனைகள், ஆசைகள், குழப்பங்கள், போராட்டங்கள் இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. போராட்டம் என்றாலே தீர்வு காணும் வரை நிம்மதி கிடையாது. ஆதலால் போராட்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக மனிதன் பல்வேறு விதங்களில் மாற்றத்தை விரும்புகிறான். மனிதனால் மாற முடியும், மாற்ற முடியும் என்பதே அவன் மாற்றத்தை விரும்புவதற்கான காரணமாகும்.
தொடரும்...

குறிப்பு:ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி எழுதிய பகவத்கீதையின் ஸராம்சம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

Wednesday, August 21, 2013

இறை வழிபாடும் வாழ்வியலும்...


நமது நாட்டில் இறை வழிபாடும் அதன் உள்ளோடும் வாழ்வியலும் 



நமது சமுதாயம் தொன்மையானது.

பழக்க வழக்கங்கள், சடங்குகள் சம்பிரதாயங்கள் இரண்டு ஆயிர ஆண்டு கால நடைமுறைகளை வழிபடுத்தி அதன் பரிணாம வளர்ச்சி கொண்டது. 

அர்த்தமுள்ளதாகவும் வெறும் சடங்குகளாகவும் உள்ளவைதான்.

சகிப்புதன்மை கொண்ட சமுகம் ஆனதால் வாழ்வியல் துன்பங்களை மறக்க விழாக்கள் அடிக்கடி எடுத்து கொண்டாடினார்கள்.

பகல் முழுக்க வேலை செய்தவர்கள் விழாக்களை இரவு முழுக்க கொண்டாடினார்கள். 

மின்சாரம் வந்து நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குள்தான் இருக்கும் அதற்கு முன்னால் முழு நிலவும் தீபந்தங்களும் தீப விளக்குகளும் துணை செய்தன. 

இறை என்ற கருத்துருவாக்கம் SELF DEFENCE SYSTEM என்று கொள்ளலாம்.

ஒரு கஷ்டம் வந்தால் இறையிடம் முறையிடுவார்கள்.

சமுக கட்டுப்பாட்டு வாழ்வியலை மீறினால் இறையின் தண்டனைக்கு உள்ளாவோம் என்ற அழ்ந்த நம்பிக்கை.

சாதனை நடந்தால் இறை அருள் என்று கொண்டாடுவார்கள்.

இறைவனுக்கு அனைவரும் கட்டுப் படுவார்கள்.

எல்லா கலைகளை /இலக்கியங்கள் இறையை சுற்றி அமைக்க பெற்றன. 

குடியிருப்பு பகுதியையே இறை ஆலயத்தை சுற்றி அமைக்க பெற்றன.

இறை பேரில் சொத்து சேர்க்க பெற்றன. இறைக்கு மான்யம் வழங்க பெற்றன. இயற்கை பேரழிவு வந்தால் ஆலயமே புகலிடம் 

யாத்ரிகர்களுக்கு உணவு,இருக்க இடம், பொழுதுபோக்கு நடவடிக்கை  எல்லாம் இறையை மையமாக கொண்டே நடந்தது 

வேலைவாய்ப்புக்கும் இறை வழிபாடு மிகவும் உதவி செய்தது. செய்து கொண்டு இருக்கிறது 

1)மறை ஓதும் அந்தணர் 

2)திருமுறை ஓதும் ஓதுவார் 

3)மடைப்பள்ளி விற்பனர் 

4)பூகொய்து மாலை தொடுப்போர் 

5)சந்தானம் அரைப்போர் 

6)பல்லக்கு தூக்கிகள் 

6)தீவட்டிகார்கள் 

7)பசுமடம் மேலாண்மை செய்வோர் 

8)பூஜை பொருள் உற்பத்திசெய்வோர் விற்பனையாளர்கள் 

9)நடனம் ஆடுவோர் 

10)புலவர்கள் 

11)மர, உலோக ,கற் சிற்பிகள்

12)இறை நில விவசாயிக்கள் 

13)பொற்கொல்லர்கள் 

14)ஓவியகாரர்கள் 

-இப்படி சொல்லிகொண்டே போகலாம் 

எல்லாவற்றிக்கும் அடிப்படை இறை நம்பிக்கையே...

இன்றைய நாகரிக வளர்ச்சியில் இன்னமும் கிராமங்களில் இறைவழிபாடு கொண்டாட்டம் இரவு நேரத்தில் சாமி உலா என்று கொண்டாடுவது தொன்மையின் எச்சமே...

நன்றி:மீனாட்சி சுந்தரம் சோமையா

Wednesday, July 10, 2013

மத மாற்றம் - வியாபாரமா?


"என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்" - இயேசு (யோவான் 2:16)


இந்த உலகத்திற்கு "அன்பை போதிக்க வந்தவர்" என்றும் "பாவிகளை ரட்சிக்க வந்தவர்" என்றும் "கடவுளுடைய குமாரன் என்றும்"  கிறிஸ்துவர்களால் அன்போடு வணங்கப்படுபவர் இயேசு கிறிஸ்து. இவர் "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு" என்றும் "பாவிகளை சிநேகியுங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்" என்றும் எந்த ஒரு எதிர்ப்பாய் இருந்தாலும் அதை அன்பாலேயே எதிர்க்க சொல்லி இருக்கிறார்". அப்படிப்பட்ட ஒருவர் தேவாலயத்தில்  வியாபாரம் செய்த வியாபாரிகளை கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டு பண்ணி தேவாலயத்திற்கு புறம்பே அவர்களை துரத்துகிறார். அன்பை போதிக்க வந்தவர் ஒரு சில நிமிடங்களில் அதை மறந்து வியாபாரம் செய்த வியாபாரிகளை சவுக்கையினால் விரட்டுகிறார். காரணம் தேவாலயத்தில் வியாபாரம் செய்தது அவரால் சகித்துக்கொள்ளவும், பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. இன்று வரை கிறிஸ்துவ ஆலயங்கள் வியாபார ஸ்தலமாக தான் உள்ளன. இன்று அவரையே வியாபாரமாக்கி விட்டார்கள். இப்படி அவரையே வியாபாரமாக்கியவர்களை எப்படி தண்டிப்பார் என்று தெரியவில்லை. மதம் பரப்புவது என்ற பெயரில் பலதரப்பட்ட வியாபார யுக்திகளை கையாளுகின்றனர் கிறிஸ்துவர்கள். அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.


கடந்த ஈஸ்டர் தினத்தன்று சென்னை மாநகர் முழுவதும் ஒரு சுவரொட்டியை காண நேர்ந்தது அதில் இயேசுவே என் பாவங்களை மன்னியும், இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும் என இப்படிப்பட்ட வசனங்கள் எழுதிய சுவரொட்டிகளை சென்னை மாநகரில் அங்காங்கே காணப்பட்டது. பிறகு இச்சுவரோட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டி இருப்பதை அறிந்தேன். மத மாற்றும் வியாபாரம் கொடி கட்டி பறப்பது இந்த சுவரொட்டிகளை பார்த்தாலே  நன்கு விளங்கும். காரணம் அச்சுவரொட்டிகளில் உள்ள ஒரு வசனம் "இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்" என்பதே. அதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாஇல்லை கூடவே II நாளாகமம் 7:14 என்று ஆகம வசன குறிப்பு வேறு அந்த சுவரோட்டுகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பைபிளில் இருக்கும் வசனத்திருக்கும் அவர்கள் குறிப்பிட்ட இந்த வசனத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதை நல்ல நேர்த்தியான வியாபார யுக்தி என்று சொல்லலாம் அல்லவா?.


"இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்" 
(II நாளாகமம் 7:14)

                                                     

II நாளாகமம் என்ற ஆகமம் பைபிளில் எழுதியது கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்பு. ஆனால் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைத்து 50 வருடங்கள் தான் ஆகிறது. இது எப்படி 2000 வருடங்களுக்கு முன்பு எழுதிய பைபிள் ஆகமத்தில் எப்படி இருக்கும். பைபிள் எடுத்து படித்து பார்த்தால் II நாளாகமம் 7:14 என்ற வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்." II நாளாகமம் 7:14


மேலே குறிப்பிட்ட உண்மையான வசனத்தை மறைத்து அதில் புதிய வசனமாக "இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்" என்பதை குறிப்பிட்டு வியாபார கடவுளாக இயேசுவை மாற்றி உள்ளார்கள். இந்த கிறிஸ்துவர்களின் வியாபாரம் என்பது இந்த அளவிற்கு பைபிளில் இருக்கும் வசனத்தையே மாற்றி புது வசனங்களை புகுத்தி இந்த அளவிற்கு ஒரு பித்தலாட்டம் செய்து  இருக்கிறார்கள். 



அடுத்தது துத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஐநூறு ரூபாய் தாள்களில் "பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்" என்று அச்சடித்து விளம்பரம் செய்து மதத்தை பரப்புகிறார்கள். கேட்டல் எங்கள் இறைவன் மதத்தை உலகம் முழுவதும் பரப்ப சொன்னார் அதனாலேயே நாங்கள் இப்படி செய்கிறோம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையாகவே இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இப்படி செய்கிறார்கள் என்பதே உண்மை. உண்மையாகவே எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அளவிற்கு வசனத்தை மாற்றியோ அல்லது ரூபாய் நோட்டுகளில் இறைவன் பெயரை அச்சடித்தோ மதத்தை பரப்புவது கிடையாது.






உலகத்திலேயே மிகவும் குறைவான மதிப்பு கொண்டது நாம் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரையே. அதை போலவே மற்றவர்களை குறை கூறுவதுமாகும். கிறிஸ்துவர்கள் தங்களிடம் உள்ள குறைகளையெல்லாம் மறைத்துவிட்டு மற்ற மதத்தினரை குறை கூறிக்கொண்டு தம் மதத்தை பரப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து "உலகமெங்கும் சுவிஷேசத்தை பிரசங்கியுங்கள்" (மாற்கு 16:15) என்று கூறிய  ஒரு வார்த்தைக்காக மதத்தை பரப்பும் கிறிஸ்துவர்கள். அவர் கூறிய மற்ற கருத்துக்களை எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டு நடக்கின்றனர் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...
(தொடரும்...)

Wednesday, June 26, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - இறுதி பாகம்



சிதறுண்டவர்களின் நிலை...

மேலே கண்ட வரலாற்று நிகழ்வுகளில் சிதறுண்ட மக்களின் நிலை கவனிக்கப்படத்தக்கது. அவர்கள் சொந்த நிலங்களையும், செல்வங்களையும் இழந்து உணவுக்குகூட வழியின்றி இருக்க இடமின்றி எங்கும் திரிந்து வந்தனர். அவர்களுக்கு இருக்க இடமும் உண்ண உணவும் தேவைப்பட்டது. அதே போல் குடியமர்ந்தவர்களுக்கு தங்களையும் தங்கள் செல்வங்களையும் அலைந்து திரியும் குறிப்பிட்ட நாடோடி கும்பல்களிடமிருந்து காத்துக்கொள்ள பாதுகாப்பு தேவைப்பட்டது.

இந்நிலையில் சிதறுண்ட மக்களும் குடியமர்ந்தவர்களும் ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். சிதருண்டவர்கள் ஊருக்கு எல்லையில் தங்கியிருந்து குடியமர்ந்தவர்களை நாடோடி கொள்ளை கூட்டத்தாரிடமிருந்து பாதுகாப்பது எனவும் அதற்கு பதிலாக குடியமர்ந்தவர்கள் சிதறுண்ட மக்களுக்கு உணவு கொடுப்பது என்பதுமே அந்த உடன்பாடு. இதனாலேயே சிதறுண்ட மக்கள் ஊருக்கு வெளியில் தங்கி வசிக்க தொடங்கினர். சிதறுண்டவர்கள் தாழ்ந்தவராகவோ (அ) குடியமர்ந்தவர்கள் உயர்ந்தவர்களாகவோ கருதப்படவில்லை. ஆனால் சிதறுண்டவர்கள் தனி இனமாக திராவிடர்களாக இருந்தனர். குடியமர்ந்தவர்கள் வேற்று இனமாக [ஆரியர் மற்றும் திராவிடர்] கலப்பாக வாழத்தணப்பட்டனர். இப்படி தான் இன்றைய தீண்டப்படாத மக்களாக [தலித்துக்களாக] ஊருக்கு வெளியில் வைக்கப்பட்டனர். அவர்கள் சேர்ந்து வாழ்ந்த பகுதி தான் சேரி என அழைக்கப்படலாயிற்று. அவர்களுக்குள் எவ்வித ஜாதி பிரிவுகளோ அல்லது தீண்டாமை பழக்கமோ இல்லை. ஆனால் நிரந்தர குடிமக்களிடம் மட்டுமே ஆரிய சமூகத்தின் வர்ணாசிரம முறையும், ஜாதி பிரிவுகளும் வளர்ந்தோங்க தொடங்கின. ஆகா ஊருக்குள்  வசித்தவர்கள் நான்கு வர்ணங்களை உள்ளடக்கிய சதுர்வர்ணங்களாகவும்; ஊருக்கு வெளியே வசித்த சிதறுண்டவர்களே அவர்ணர்களாக ஜாதிக்கு அப்பாற்பட்டவர்களாக தலித் சமுதாயாமாக பிரிந்து நின்றனர்.


தீண்டாமை திணித்தல்...
பெளத்தத்திற்கும் பார்பனியத்திற்கும் இடையிலான போராட்டமே இந்திய சமூக வரலாறாக இருந்து வந்துள்ளது. அரசுகளும், பேரரசுகளும் இந்த பின்னணியிலேயே நிறுவப்பட்டு வந்துள்ளது. மேலாதிக்கத்தினை பெறுவதில் இவ்விரு தத்துவங்களுக்குமிடையே நடந்த போராட்டத்துடன் தான் தீண்டப்படாதோராகிய தலித் மக்களின் வரலாறும் இணைந்துள்ளது. தீண்டப்படாத மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமை கொடுமையும் அவர்களின் இழிவான வாழ்வு முறையும் இந்த போராட்டத்தின் விளைவாகும். பார்ப்பனியத்திற்கு எதிராக தொடர்ந்து பெளத்த மதத்தை கடைபிடித்ததாலும் பார்ப்பனியர்களும் மற்ற வர்ணத்தாரும் மாட்டிறைச்சியை உண்பதை கைவிட்ட பிறகும் தொடர்ந்து சிதறுண்டவர்கள் மட்டும் காலத்தின் கட்டாயத்தால் அதை உண்டு வந்ததாலும் இம்மக்கள் மீது வெறுப்பினை உமிழ்ந்து தீண்டாமை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. பிரிந்து வாழ்ந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டது.

பார்ப்பனியர்கள் தீண்டத்தகாதவர்களை அசுத்தமானவர்களாக புறக்கனிக்கப்பட்டதாகத்தான் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் தீண்டப்படாத மக்கள் தான் பார்ப்பனர்களை என்றும் அசுத்தமானவர்களாக ஒதுக்கி வைத்திருந்தனர் என்பதே உண்மை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒரு பார்ப்பனனை தங்கள் பறசேரிக்குள் நுழையவிடுவதில்லை. அவன் வருகை அழிவின் அறிகுறி என்று நம்புகிறார்கள். பார்ப்பனர்களை அசுத்தமானவர்களாக கருதியே தங்கள் வீட்டு அர்ச்சகர்களாக கூட அவர்களை பஞ்சமர்கள் (அ) அவர்ணாக்கள் அழைப்பதில்லை. காரணம் சிதருண்டவர்கள் புத்த மதத்தினர் என்பதால் பார்ப்பனர்களை ஒதுக்கியே வைத்திருந்தான் என்பதே உண்மை. அதனால் தான் பார்ப்பனர்கள் திரும்பவும் ஆதிக்கம் பெற முயற்சித்து அவர்கள் மதத்தை தீவிரமாக பரப்பிய போதும் தொடர்ந்து சிதறுண்டவர்கள் இடையே பெளத்தவர்களாகவே விளங்கினர். அத்துடன் மாட்டிறைச்சி உண்பதையும் பார்ப்பனர்களின் வழியை பின்பற்றி கைவிடவில்லை. இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் இவர்களை புத்த மதத்தினர் என்று வெறுத்தனர். இவர்களுக்கு எதிராக அவமதிப்பையும் துவேஷத்தையும் பிரச்சாரம் செய்தனர். புத்த மதத்தை கைவிடவில்லை என்பதால் தீண்டாமை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. தீண்டாமை புத்த மதத்தினருக்கும் பார்ப்பனர்களுக்கும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர்கள்? என்ற போட்டியால் ஏற்பட்டது.

முடிவுரை...
இந்தியாவின் பல பகுதிகளில் பெரும்பான்மையான தலித்துக்கள்:
தென்னிந்தியாவில் - ஆதிதிராவிடர்கள், ஆதிஆந்திரா, பறையர்கள், பள்ளர்கள்...
வட இந்தியாவில் - சாமார்கள்
மத்திய மேற்கு இந்தியாவில் - மாகர்கள்
பஞ்சாபில் - சுகுராக்கள் என இவர்கள் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் எந்த அளவிற்கு நமது பூர்வ வரலாறோடு தொடர்புடையவர்கள் என்பதை அறியலாம். ஆக இந்தியாவின் பூர்வ குடிகள் திராவிட மக்களாகிய தலித் மக்களே என்றும், அவர்கள் பூர்வீக இந்திய திருநாட்டின்  பெளத்தர்கள் என அயோத்தி தாச பண்டிதர் தமது தமிழ் மற்றும் மனித இன ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். அதனால் தான் அம்பேத்காருக்கு முன்னோடியாகவே தென்னிந்தியா பெளத்த சங்கம் துவக்கி பெளத்த நெறி பரப்பும் பணியினை ஆற்றினார். அம்பேத்காரும் தமது பூர்வ மதமான பெளத்தத்தில் தம்மையும் தமது இனத்தையும் இணைத்து வழிநடத்தி சென்றார்...

(முற்றும்...)

Sunday, June 2, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 4

நாகர்கள் - தாசர்கள் - திராவிடர்கள்...

ஆரியரல்லாத நாகர்கள் மிகப் பழமை வாழ்ந்த மனிதர்களாக ரிக் வேத குறிப்புகள் காட்டுகின்றன. நாக வழிபாடு இவர்களுடையதே. ஓர் உயர்ந்த பண்பாட்டை பெற்ற இவர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்ததோடு இந்தியாவின் பெரும்பகுதியையும் ஆண்டு வந்தனர். இந்தியாவின் மகாரஷ்ட்ரம் முழுவதும் பரவி இருந்ததுடன் மன்னரும் மக்களும் நாகர்களே. கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆரம்ப காலங்களில் ஆந்திரப்பிரதேசமும் அதன் சுற்றுப்புற பகுதிகளும் நாகர்களில் ஆட்சியில் இருந்தன. கி.பி.4 ன் துவக்கத்தில் வடஇந்தியா பல நாக அரசர்களால் ஆளப்பட்டு வந்தன.  பாகிஸ்தானில் உள்ள காரச்சிக்கு அருகில் மஜேரிகா என்ற நாகதேசம் இருந்துள்ளது. வடஇந்தியாவில் குஷான சாம்ராஜ்யம் கி.பி.4ல் வெற்றிகொள்ளப்பட்டு சமுத்திர குப்தர் வரும் வரை ஆளப்பட்டுள்ளது. கி.பி.6ல்  சௌராஷ்டிரவை நாகர் ஆண்டனர். சாதவாகனர்களும் அவர்களுக்கு பின் வந்த சுட்டு குல சாதகர்னிகர்களும் நாகர்களின் வாரிசுகளே...

கி.பி.9 ல் மத்திய இந்தியாவில் நாகர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. பல்லவ கல்வெட்டுக்கள், ஷர்ஷ கல்வெட்டுக்கள் நாகர் குடும்பங்களுடன் கொண்ட மண உறவுகளை தெளிவாக்குகின்றன. இரண்டாம் சந்திர குப்தர், ராஜேந்திர சோழன் மற்றும் அஸ்வத்தாமா போன்ற மன்னர்கள் நாகர் பெண்களை மணந்துள்ளனர். நாகர்கள் வடமேற்கில் தஷ்சீலவிலிருந்து, வடகிழக்கில் அஸ்ஸாம் வரையிலும்; தெற்கில் தென்னிந்தியாவிலிருந்து சிலோன் வரையிலும் வியாப்பித்திருந்தனர். கி.பி. ஆரம்ப கால தமிழ் இலக்கியங்களில் நாக நாடுகளை பற்றி அறிகிறோம். மலபார், திருவாங்கூர், நாகர்கோயில் ஆகிய இடங்களில் இன்றும் நாகபூஜையை காணலாம். நாகர் பெண்கள் அழகுள்ளவர்களாக இருந்ததினால் பின்னாளில் ஆட்சிக்கு வந்த சேரர்களுடன் மண பந்தங்களில் கலந்துள்ளனர். சேரர் பழந்தமிழ் சாராய் என்பது நாகாவன் திராவிட சமச்சொல். சேரமண்டலம், நாகத்வீபா () நாகதேசம் ஆகியவை தெற்கு வாழ் திராவிடர்களின் அசுரர்தோன்றுதலை குறிக்கும். கங்கை பள்ளத்தாக்கின் பெரும்பகுதியில் பரவியுள்ள சேருக்கன் என்பவர் மிகப் பழங்கால இனத்தவர். இவர்கள் திராவிட சேரர்களின் பந்தங்களே. மேலே கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து தென்னிந்தியாவில் வசிக்கும் திராவிடர்கள் தான் வடஇந்தியாவில் வசிக்கும் நாகர்கள் () அசுரர்கள் என்பது உண்மை. ஆகா தாசர்-நாகர்-திராவிடர் என்பன ஒரே மக்களை குறிக்கும் சொற்களே...

இதில் "திராவிடர்" என்ற சொல் ஒரு மூல சொல்லல்ல என்பதை கவனித்தல் வேண்டும். திராவிடா என்ற சொல் சமஸ்கிருதப்படுத்தப்பட்ட "தமிழ்" என்ற சொல்லின் வடிவமே... மூலச் சொல்லான தமிழ் சமஸ்கிருதப்படுத்தப்பட்ட போது தமிலா (Damila) பிறகு த்ரமில்லா (Dramilla) என்றாகி திராவிடா (Dravida) என மருவியது. திராவிடா என்ற சொல் ஒரு மொழியின் பெயரை குறிப்பது. ஒரு மக்களினத்தை குறிப்பதல்ல. தமிழ் அல்லது திராவிட என்பது தென்னிந்தியாவில் மட்டும் பேசப்பட்ட மொழியல்ல. ஆரியர் வருகைக்கு முன் அனைத்து இந்தியா அளவிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழியாகும். ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் ஏற்பட்ட உறவின் காரணமாக வடஇந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விட்டுவிட்டு அதற்கு பதிலாக சமஸ்கிருதத்தை வைத்தனர். தென்னிந்தியா நாகர்கள் தாய் மொழியான தமிழை மட்டும் வைத்துக்கொண்டு சமஸ்கிருதத்தை ஒதுக்கினர். இதனால் தான் திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களுக்கு மட்டுமே ஒருமித்து நின்றது. ஒரே மக்களின் கலாச்சார () இனம் பெயராக திராவிடர் என்றும் வழங்கப்பட்டது. ஆகவே தாசர்கள் தான் நாகர்கள், நாகர்கள் தான் திராவிடர்கள் இனம் என்று பார்த்தால் இந்தியாவில் ஆரியர்-நாகர் என்ற இரண்டு இனம் மட்டுமே இருந்தன என்பது வரலாற்று உண்மை...

(தொடரும்...)

Wednesday, May 1, 2013

மதம் தோன்றிய விதம் - 2

இயற்கை வழிபாடு:
மதங்கள் என்பது காட்டுமிராண்டிதனமாக வாழ்ந்த மனிதனை நெறிமுறைபடுத்த உருவாக்கப்பட்டவையே... கடவுள் என்று யாரும் வந்து நான் இப்படி தான் இருப்பேன் என்று யாருக்கும் தரிசனம் தந்ததும் கிடையாது, யாரிடமும் பேசியதும் கிடையாது. இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி! மதங்கள்  அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே. இன்று இருக்கும் மதங்களில் அறிவியலும் மூடநம்பிக்கைகளும் கலந்தே இருக்கின்றன.

ஆதி கால மக்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தர்கள் குறிப்பாக அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த பூமி, மழை, வானம், அக்னி, மர வழிபாடு மற்றும் சூரிய வழிபாடு போன்ற வழிபாடுகளே நடைபெற்று வந்துள்ளது. நாளடைவில் கல் வழிபாடு தோன்றியது. இந்த கல் வழிபாடு என்பது பல விதமான வேறுபாடுகளில் இன்றும் கூட நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாது மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் ஒரு சிலது பயத்தின் அடிப்படையிலும் எழுந்தன. மிருக வழிபாடு ஆரம்ப காலங்களில் பயத்தின் அடிப்படையிலும் பிறகு மிருக வதை தடுப்பதற்கும் கூட  உருவாகி இருக்கலாம். 
*இடி,
*மின்னல்,

*மழை,

*சூரிய வழிபாடு,
*கொடிய விலங்குகள்  ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.

நடுக்கல் வழிபாடு: 

இந்த நடுக்கல் என்பது தமிழகத்தின் கிராமங்களில் ஊருக்கு வெளியிலேயோ அல்லது ஊருக்கு மத்தியிலேயோ வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான விசேஷ தினங்களில் அதற்கு படையல் வைத்து கும்பிடுவார்கள். இப்படிப்பட்ட நடுக்கற்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஜாத்திரை நடத்துவார்கள். இந்த ஜாத்திரை என்பது ஒரு வாரம், பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள் கூட இன்றும் பல கிராமங்களில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. எனக்கு தெரிந்து திருப்பதியில் மட்டும் பதினைந்து நாட்கள் நடுக்கல்லிற்கு ஜாத்திரை நடத்துகிறார்கள். இந்த நடுக்கல் வழிபாடு மற்றும் அதற்கு ஜாத்திரை எதற்கு நடத்துகிறார்கள் என்பதை அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம். இந்த நடுக்கல் வழிபாட்டை சக்திக்கல் வழிபாடு என்றும் கூறுகிறார்கள்.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு: 

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன. 

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு:  

நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.
* கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்
* தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர், 
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர். 

ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம். நடுக்கல் பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில் காணலாம்.